Tuesday 31 December 2013

உன்னதம் என்பதன் பொருள்


ஆறுகளை இணைத்த ஈரோட்டு மன்னரின் கதை - இவர் வரலாற்றை படித்தபோது இப்படியும் ஜமீன்கள் இருந்தார்களா என்றே தோன்றியது. உன்னதம் என்ற சொல்லின் அடையாளம். மஞ்சள் மாநகர ஈரோடுமுற்காலத்தில் வறண்ட பூமியாக இருந்தது. பவானியும் காவேரியும் பாய்ந்தும் இந்நிலை. இதனை மாற்றியவர், காளிங்கராயர்.

ஈரோடு-வெள்ளோடு கனகபுரத்தில் விவசாயியின் மகனாக பிறந்தார். பாண்டியர் படையில் சாதாரண வீரனாக சேர்ந்து தன் அறிவு,வீரத்தால் முதன்மை அமைச்சர் பதவிக்கு வந்து, பின் வீரபாண்டிய மன்னனால் காளிங்கராயன் பட்டம் சூட்டப்பட்டு ஈரோட்டு ஜமீனானார்.
மேட்டுபகுதியாக இருந்ததால் காவேரியில் இருந்து அக்காலத்தில் நீரை ஈரோட்டுக்கு கொண்டு வர இயலவில்லை. எனவே, பவானியை காவேரியில் கலக்கும் முன்பு பிரித்து கொண்டுவந்து மீண்டும் நொய்யல் ஆறு மூலம் காவிரியில் கலக்க வைத்தார். இதனை செயல்படுத்த சந்தித்த இடர்கள் ஏராளம். கல் கொண்டுவந்ததில் இருந்து கரை கட்டியதுவரை, கடைசியில் மதகு அமைத்தது, பின் கற்கள பிரிக்கும் பகுதி என அனைத்திலும் வெற்றிகண்டார். தற்பொழுதுள்ள பொறியாளர்களுக்கும் இது ஒரு நல்ல பாடம். சுமார் 33 அடி இறக்கமானதால் வெள்ளபெருக்கால் கரைகள் உடைந்தது, அதை சமாளிக்க பாம்பை போல வளைத்து கொண்டு சென்றார். இதனால் இன்னும் பல ஆயிரம் ஏக்கர் பலனடைந்தது.

கால்வாய் நீளம்:90 கிமீ; கால்வாய் இறக்கம்:10 மீ; நேரடி பாசனம்:சுமார் 16,000 ஏக்கர்; மறைமுக பாசனம்:சுமார் 20,000 ஏக்கர். இத்தனையும் வெறும் 12 (1271-1283)ஆண்டுகளுக்குள் முடித்து காட்டினார்!!

இவ்வளவு சிரமப்பட்டு வெற்றிகண்ட அவர் உறவினர்களே, “காளிங்கராயன் அவன் ஜமீன் நிலங்களுக்காக வாய்க்கால் வெட்டிகொண்டான்” என்று சொன்ன சொல்லை தாங்காது “நானும் எனது வாரிசுகளும் இந்த கால்வாய் நீரை தொட கூட மாட்டோம்” என்று கூறிவிட்டு பொள்ளாச்சி சென்று ஊத்துக்குளியில் தங்கிவிட்டார்!

அங்கும் அவர் ஜமீனாகிவிட்டார். இன்றும் அவர் ஜமீன், பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளியில் உள்ளது. அவ்வை சொன்னது போல,

“சீரியர் கேட்டாலும் சீரியரே சீரல்லர் கெட்டால்; பொற்குடம் உடைந்தால் பொன்னாகும்-என்னாகும் மண்குடம் உடைந்தக்கால்”

(இந்த சம்பவம் நடந்திராவிட்டால் அமராவதியையும் இதே இணைப்பின் கீழ கொண்டு வந்திருப்பார், ஒரு வரலாற்று பிழை!)

உடல்பலம், மூளைபலம், பொதுநலம் மூன்றும் ஒருங்கே (!) இருந்த இவரை – “உன்னதம்” என்ற சொல்லின் வாழ்வியல் அடையாளமாக இவரை சொல்லலாம் அல்லவா..??

http://www.hindu.com/2007/01/17/stories/2007011700470300.htm
http://ta.wikipedia.org/wiki/காளிங்கராயன்
http://ta.wikipedia.org/wiki/காளிங்கராயன்_வாய்க்கால்

பி.கு: காளிங்கராயன் வம்சத்தில் ஒருவர் பின்னாளில் வாய்க்காலை சீர்படுத்திதர தன் சொத்துக்கள் அனைத்தையும் விற்று செலவழித்தார்.



No comments:

Post a Comment