Tuesday 31 December 2013

நம்மாழ்வார் சில நினைவுகள்


பல ஆண்டுகளுக்கு முன்னர் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்லூரியில் முதன்முதலாக விவசாய கருத்தரங்கில் நம்மாழ்வாரை நானும் Raja S King ம் சந்தித்தோம். அப்போது அவரை அதிகம் யாருக்கும் தெரியாது. முதல் அறிமுகத்திலேயே "நீங்க நெறைய சாதிப்பீங்க.. உங்க கண்ல இருக்கற ஒளி எனக்கு நல்லாவே உணர்த்துது" னு வாழ்த்தினார்.. அதுதான் என்னிடம் அவர் பேசிய முதல் வாக்கியம்.. நேர்மறை சிந்தனையும் ஊக்கமும் எப்போதும் உண்டு.. தொலைபேசி உரையாடல்கள் மற்றும் Iyal Vaagaiநாற்றுப்பண்ணை மூலமும் அவரின் தாக்கம் இருந்துகொண்டே இருந்தது. பாரமபரிய வாழ்வியல் குறித்து பல தகவல்களை அவர்மூலம் பெற்றேன். 

அவர் மீது எனக்கு பல கோபங்கள் இருந்ததுண்டு. நேரில் சந்தித்து உரிமையோடு சண்டையிட எண்ணினேன். அவர் கெயில் கேஸ்லைன் பிரச்சனைக்கு பெரிதாக குரல் கொடுக்காத கோபம. அவர் உடல்நிலை சரியில்லாத போது நாட்டுப்பசுக்களின் அர்க் மூலம் செய்யப்பட மருந்துகள் பயன்படுத்தி பலன்களும் தெரிந்தது. அதோடு வேளாண்மை பொருளாதாரத்துக்கு நாட்டுப்பசுக்களின் பங்களிப்பு உள்ள அளவு அவற்றின் பாதுகாப்பு மற்றும் மீட்சிக்கு அவர் குரல் கொடுக்கவில்லை என்ற கோபம். ஈரோட்டில் நடந்த புத்தக திருவிழாவில் ஈரோட்டு தோல்/சாய விஷ பிரச்சனை & நாட்டு பசுக்கள் குறித்தும் பேசாததும் இன்னொரு வருத்தம். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கம்யுனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் தலைமையில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் அதைக்குறித்து பேசவேண்டாம் என்று கூறிவிட்டனர் என்றார். திருப்பூரில் சாய விஷம் பற்றி பேசியவர் இங்கு ஏன் பேசாமல் போனார் என்று எதிர்கேள்வி கேட்டு அவர் உதவியாளர்களிடம் சண்டையிட்டேன். அதே கேள்வியை பதிலாக என்னிடம் திருப்பி கூறினர். முதலாளித்துவத்தை எதிர்க்கும் கம்யுனிஸ்ட்கள் ஏன் மறுக்க வேண்டும் என்ற என் வாதம் தவறென்று நிரூபித்தார்கள்.



இந்த கோபம் எல்லாம் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துவரும் சூழலில் நம்மாழ்வார் போன்ற மாற்று தலைமைகள் மேல் கொண்ட நம்பிக்கையின் வெளிப்பாடே. ஆனால் இன்று அவர் மேல் இருந்த கோபங்கள் மறைந்து, இறுதியாக அவரை பார்க்கக்கூட வாய்ப்பில்லாமல் போய்விட்டது என்று வருத்தமுற வைக்கிறது. எப்போதும் போல அவரது படத்தை மட்டும் வைத்துக்கொண்டு அவரின் நோக்கங்களை தற்கால மீடியாவும் சினிமாவும் இளைஞர்களிடம் மறக்கடித்து விடுமோ என்ற பயத்தையும் உண்டுபண்ணுகிறது.

No comments:

Post a Comment