Friday 3 October 2014

நீராதாரங்கள்

ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள குளம் மற்றும் ஏரி, கிராமத்தின் உயிர் போன்றது. உண்மையான மாரியம்மன் கோயில்கள் அது. நிலத்தடி நீருக்கும், ஈரத்தன்மைக்கும் ஆதாரம். ஏரி குளங்கலுக்கும் கோயில்களுக்கும் தொடர்புண்டு. நீர் வரத்து வாய்க்கால்கள், மற்றும் வடிகால் வாய்க்கால்கள் குளங்களின் உயிர்நாடிகள். ஒவ்வொரு கிராமத்திலும் ஆல் (கிழக்கு), அரசு(மேற்கு), இச்சி (வடக்கு), அத்தி (தெற்கு) போன்ற மரங்கள் நடுவது நியமம் போல குளங்களும் மிக முக்கிய அங்கங்களாகும். மன்னர்கள் முதல் தேவதாசிகள் வரை பல தரப்பினர், தங்கள் உயிர், பொருள் என அனைத்தும் செலவு செய்து, பல பலிகள் எல்லாம் கொடுத்து குளத்தை வெட்டியிருப்பார்கள். ஜலாசய சாஸ்திரம் என்று இதற்குரிய தொழில்நுட்பமே உள்ளது. கொங்கதேசத்தில் குலகுருக்கள் இவ்வாறான ஏரிகளை அமைக்க கிராம வாஸ்து பார்த்து, இடம்கண்டு,  வாய்க்கால்வழிகள் அமைக்க ஆலோசனை கொடுத்துள்ளனர். குள எல்லைகளில் பனை மரங்களும், குளத்தைக் காக்க கருப்பனாரும் இருப்பார். இன்று பொதுநலன், தர்மம் என்பதை சிறிதும் நினைத்துப் பார்க்காத பணக்கார, ரியல்எஸ்டேட், மற்றும் திராவிட பூதங்கள் அந்த குளங்களையும், வாய்க்கால்களையும் விழுங்கி வருகின்றன. கிராம இளைஞர்கள் தங்கள் ஊர் நீராதாரங்களின் பரப்பளவு, வாய்க்கால்கள் போன்றவற்றை தொகுத்து அறிந்து வைத்திருக்க வேண்டும். நதிகள் இணைப்பு, அணைகள் போர்வை எந்த அளவு உதவுகின்றன என்பது வாதத்துக்குரியது. ஆனால் ஏரி குளங்கள் என்றென்றைக்கும் சாஸ்வதமானது. 

ஏழு ஏரிகள் வெட்டி அதன் காரணமாக உயிரை இழந்த
மல்லை ஸ்ரீ தொண்டமா கவுண்டர் 

அமிர்தவல்லி என்னும் தேவதாசி வாய்க்கால் வெட்ட உபயம் தர
அமிர்தவல்லி வாய்க்கால் என்று பேரோடு இருந்த பருத்திப்பள்ளி ஏரியின் நிலை..

கற்பகாயி, சுந்தராயி என்று இரு தேவதாசிகள் தங்கள் கைப்பொருள் அனைத்தையும் கொட்டி கடைசியில் தங்கள் உயிரையும் கொடுத்து வெட்டி வைத்த ஏழூர் ஏரியின் நிலை.

அநேகமாக எல்லா ஊரிலும் ஏரிப் பிரச்னை உண்டு. மீட்க நினைத்தால், முதலில் அந்த ஏரியில் ஒரு பொங்கல் வைத்து ஏரியைக் காக்க ஸ்தாபிக்கப்பட்ட கருப்பனார் அல்லது முனியப்பனுக்கு ஒரு பலி கொடுத்துவிடுங்கள். உங்களின் வெற்றி எளிதாகும். வருடந்தோறும் அக்கோயில் விழா ஒழுங்காக நடந்தாலே குளத்தின் எல்லைகள் அனைவரும் அறிந்து குளத்தின் பராமரிப்பை சரியாக பார்ப்பார்கள். 

தாசில்தார்-கலக்டர் அலுவலகம் சென்றால் உங்கள் ஊர்-ஏரி குளத்தின் பழைய FMP மேப் கிடைக்கும். RTI போட்டு பெற்றுவிடலாம். தற்போது ஆன்லைனில் கூட கிடைக்கிறது. அதைக்கொண்டு ஊராட்சி நிர்வாகம் மூலம் உங்கள் குலத்தின் இடங்களை கண்டறிந்து மீட்டுவிடலாம். தற்போது நூறு நாள் வேலைப்பணிகளில் ஏரி குளப் பணிகளை சேர்த்துள்ளதால் வாய்க்கால் குளங்களை சரி செய்வது எளிது. பொதுப்பணித்துறை, விவசாயத்துறை போன்றவற்றில் உபயோகமான தகவல்களைப் பெற முடியும் (ஒரு நல்லவன் கூட இருக்கமாட்டான் என்பதில் உடன்பாடு இல்லை). குளங்களை மீட்கும் எண்ணமுள்ளவர்கள், தனிசெய்தியில் தொடர்பு கொண்டால் எனக்கு தெரிந்த தகவல்களை-தொடர்புகளை பகிர்ந்து கொள்கிறேன். வழிகாட்டத்தான் முடியும். உங்கள் ஊருக்கு-உங்கள் வாரிசுகளுக்கு நன்மை செய்ய யுகபுருஷன் வர மாட்டான் நீங்கள் தான் செய்யணும். 
மொளசியில் வள்ளல் வேலப்ப கவுண்டர் பாண்டியன் படைக்கு உணவிட்டு
அன்னத்தியாகி பட்டம் பெறக காரணமாக இருந்த ஏரியின் நிலை.
புதிய குளங்கள் வெட்டுவதை விட ஏற்கனவே பல நுட்பமான விசயங்களை ஆய்ந்துணர்த்து வெட்டப்பட்ட பழைய ஏரி, குளங்களே சிறந்தவை. தர்ம நூல்கள் கூட, புதிய தர்மங்களை செய்வதை விட தடைபட்ட தர்மத்தை நடைமுறைப்படுத்துவது மிகப்புண்ணியம் என்கின்றன. (முக்கியமாக, பழமையான கோயில்கள் பூஜைகள் இன்றி இருக்க, புதிய கோயில்களை கட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு இது தேவையான செய்தி)
ஈரோடு மாநகரில் இருக்கும் ஏரி கருப்பராயன் கோயில். ஆனால் ஏரி எங்கே??
இந்த கோயில் அமைவிடம் "பெரியார் நகரில்" புரிந்ததா..??

பல ஊர்களில் ஏராளமான இளைஞர்கள் இதுபோல அவர்கள் குளங்களை மீட்டுள்ளனர். இதை நான் எழுதியது, கிராமத்துக்கு-இயற்கைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்களுக்கு..  "எங்கீங்க.. யாருங்க செய்யறது.. எவன்க கேப்பான்" னு சலிப்போடு பேசுபவர்கள் இங்கே கருத்திட வேண்டாம்; நேராகப் போய் குழியை வெட்டிப் படுத்துக் கொள்ளவும். அதுதான் நம்மால் எளிதாக செய்யகூடிய வேலை. இந்த சோம்பேறிகள் பிறருக்கும் சோர்வைப் பரப்புவதோடு செய்பவனையும் எளிதில் கோமாளியாக்கிவிடுவார்கள்.

No comments:

Post a Comment